தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவர் ரகுநாத் (25). கூலித் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி மனைவியும், இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ரகுநாத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ரகுநாத், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரம் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரகுநாத் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து வந்த மாசார்பட்டி போலீசார், ரகுநாத்தின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 2 வயதுக் குழந்தையைத் தவிக்கவிட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

