கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சுற்றுலாத் தலமான விதுரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபரும் இளம்பெண்ணும் அறை எடுத்து தங்கினர். அவர்கள் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கதவை உடைத்து பார்த்தபோது இருவரும் அறையினுள் பிணமாக கிடந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் மறைமுட்டம் பகுதியைச் சேர்ந்த சுபின் (28) என்பதும், அவருடன் இருந்தவர் ஆரியங்கோடு பகுதியைச் சேர்ந்த மஞ்சு (31) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் காதலர்கள் என்பதும், வெவ்வேறு நபர்களை திருமணம் செய்த பின்னரும் தங்கள் பழக்கத்தை தொடர்ந்து வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.
இவர்களது காதல் விவகாரம் இருவரது குடும்பத்தினருக்கும் தெரியவந்ததால், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இது தொடர்பாக இருவரது குடும்பத்தினரும் தனித்தனியாக போலீசில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், விதுரா விடுதியில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.
தங்கள் காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிந்துவிட்டதாலும், இனி ஒன்றாக வாழ முடியாது என்ற அச்சத்தாலும் இருவரும் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். உடல்களைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

