கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி நரி முடக்கு பகுதியில், வனப்பகுதிக்கு மிக அருகில், வனவிலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்வதற்காக, வனத்துறை சார்பில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பணை அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மர்ம நபர்கள் மருத்துவக் கழிவுகளைக் கொட்டி தீ வைத்து இருந்தனர்.
மருத்துவ கழிவுகள், கண்ணாடி பாட்டில் துண்டுகள் ஆகியவற்றால் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கக்கூடிய சூழல் ஏற்படும்
என வனவிலங்கு ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து இருந்தனர்.இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இந்த செய்தியின் எதிரொலியாக வனத்துறை,வருவாய்த்துறை,மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சி துறை,அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில், மருத்துவக் கழிவுகள், மருந்து பாட்டில், ஊசி ஆகியவை, கோழிகளுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகள் எனவும் அருகே உள்ள கோழிப் பண்ணையை சேர்ந்த நபர்கள் கொட்டி தீ வைத்திருக்கலாம் என தெரியவந்தது.இதையடுத்து நரி முடக்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.