அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் நகராட்சி புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. அதன்படி புதிய பேருந்து நிலையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் முதற்கட்டமாக உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் 21 பேருந்து நிறுத்த தடங்கள், 30 கடைகள், நிர்வாக அறை, உணவகம், நேரக்கட்டுப்பாட்டு அறை, டிக்கெட் புக்கிங்க கவுண்டர், ஏ.டி.எம் அறை, போக்குவரத்து துறை
அலுவலக அறை, எலக்ட்ரிக்கல் அறை, பாதுகாப்பு அறை கட்டுப்பாட்டு அறை, கழிவறை உள்ளிட்ட பணிகளும், இரண்டாம் கட்டமாக மூலதன மான்யநிதி 2023-24 திட்டத்தின் கீழ் ரு.3.78 கோடி மதிப்பீட்டில் 6 பேருந்து நிறுத்த தடங்கள், 15 கடைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, நேரக்கட்டுப்பாட்டு அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, கழிவறைகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளை இன்றையதினம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ் . எஸ்.சிவசங்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் விவரம் குறித்து ஆய்வு செய்ததுடன், எஞ்சியுள்ள பணிகளை விரைவாக முடித்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், அரியலூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார், அரியலூர் நகராட்சி பொறியாளர் காசிநாதன், உதவி செயற்பொறியாளர் பேரூராட்சி திருச்சி கோட்டம் தமயந்தி, அரியலூர் நகர்மன்ற துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.