Skip to content

கார் ஓட்டப் பழகியபோது விபரீதம்: தெப்பக்குளத்தில் பாய்ந்த கார்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லல் பகுதியில் கார் ஓட்டப் பழகியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் தெப்பக்குளத்திற்குள் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லல் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், நேற்று தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் விட்டுவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கல்லல் தெப்பக்குளம் பகுதியில் கார் வந்தபோது, கணவரிடம் தனக்கு கார் ஓட்டக் கற்றுத்தருமாறு மனைவி கேட்டுள்ளார். இதையடுத்து, மனைவிக்குக் கணவர் கார் ஓட்டப் பயிற்சி அளித்துள்ளார்.

பயிற்சியின் போது, எதிர்பாராதவிதமாகப் பிரேக் பிடிப்பதற்குப் பதிலாக ஆக்சிலேட்டரை மனைவி வேகமாக மிதித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வேகம் எடுத்த கார், கட்டுப்பாட்டை இழந்து தெப்பக்குளத்தின் படித்துறை வழியாகத் தண்ணீருக்குள் பாய்ந்தது. குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் கார் மிதக்கத் தொடங்கியது.

உடனடியாகச் செயல்பட்ட தம்பதியினர், காரின் கதவுகளைத் திறந்து வெளியே குதித்து நீந்தி கரை சேர்ந்தனர். இதனால் அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிறிது நேரத்தில் கார் மிதந்தபடியே குளத்தின் நடுப்பகுதிக்குச் சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரைக்குடி தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காரை மீட்டனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!