Skip to content

கொசுவத்தி சுருள் – தீயில் கருகிய 2 வயது குழந்தை உட்பட 3 பேர்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (36). கட்டுமான வேலை சேர்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சித்ரா (25) என்கிற மனைவியும், ஜெயஸ்ரீ (2) என்கிற குழந்தையும் உள்ளனர். இவரது சகோதரி மகேஸ்வரியின் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் நேற்றிரவு அவரை பார்ப்பதற்காக தனது குடும்பத்துடன் பார்த்திபன் சென்றுள்ளார். தொடர்ந்து குழந்தைக்கு காய்ச்சல் அதிகரித்ததால் பார்த்திபனின் அக்கா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் ராம்நாத் ஆகியோர் குழந்தையை அழைத்துக்கொண்டு

நள்ளிரவில் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதனால் பார்த்திபனை வீட்டிற்கு அனுப்பாமல் இங்கேயே தங்குமாறு கூறி விட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து பார்த்திபன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிலேயே படுத்து உறங்கி உள்ளனர். தொடர்ந்து மகேஸ்வரி தனது குழந்தைக்கு சிகிச்சை முடிந்த பின்னர் இன்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு முழுவதும் கரும்புகள் சூழ்ந்து தீ பற்றி எரிந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்றபோது மூச்சு திணறல் ஏற்பட்டதால் மறைமலைநகர் தீயணைப்புத் துறையினர் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பார்த்திபன், அவரது மனைவி சித்ரா, குழந்தை ஜெயஸ்ரீ ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் வைக்கப்பட்ட துணிகளின் அருகே கொசுவத்தி பற்ற வைத்துவிட்டு தூங்கியதால் வீடு முழுவதும் தீ பரவி தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது. தொடர்ந்து அக்கம்பக்கத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.‌ இந்த சம்பவம் கன்னிவாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!