பாலக்காடு: டீ கொடுக்க மறுத்ததால் மருமகளை வெட்டிக்கொன்ற மாமியாரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே கருளாயி பகுதியைச் சேர்ந்தவர் சுனில்பாபு (40), ஆட்டோ டிரைவர். இவருக்கு ரஜிலா (30) என்ற மனைவியும், தீர்த்தா, ரிஷிகா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் சுனில்பாபு நிலம்பூர் ரயில்நிலையத்திற்கு ஆட்டோ ஸ்டேண்டிற்கு சென்றார். அப்போது இவரது தாயார் சாந்தா (72) மருமகள் ரஜிலாவிடம் டீ கேட்டுள்ளார்.
சமையல் அறையில் டீ போட்டு வைத்திருப்பதாகவும் அதை குடிக்கும் படியும் ரஜிலா கூறிவிட்டு தன் வேலைகளை கவனித்தார். ஏற்கனவே இருந்த முன்விரோதம் மற்றும் ஆத்திரத்தில் சாந்தா ரஜிலாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ரஜிலாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து சாந்தாவை கைது செய்தனர்.

