தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்திலும் தென் மேற்கு பருவமழை அதிகமாக பெய்து வருகிறது. மும்பையில் கடந்த 1 வாரமாக தொடரும் கனமழை காரணமாக எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி, செம்பூர் , மட்டுங்கா, சைன் , பாரெல் பகுதிகளிலும் மழை கொட்டிவருகிறது.
மழை காரணமாக போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தண்டவாளங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. விடாத மழை காரணமாக அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு தனியார் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
மேலும் முக்கிய சாலை சந்திப்புகளில் வெள்ளம் சூழ்ந்து நிற்பதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. கனமழை காரணமாக மும்பையில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளியூர் செல்பவர்கள் தங்களது பயணத்தை தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பான உத்தரவு மும்பை பெரு மாநகராட்சி(பிஎம்சி) பிறப்பித்துள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மும்பை நகரம், கிழக்கு, மேற்கு புறநகர் பகுதிகளில் முறையே 186.43, 208.78, 238.19 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நகரின் பல்வேறு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தாதர், மட்டுங்கா, சைன் பகுதிகளில் ரயில்வே தண்டவாளங்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அடைமழை காரணமாக ஒட்டுமொத்த மும்பை மாநகரமே 2 தினங்களாக முடங்கி கிடக்கிறது.