Skip to content

நேபாளம் போராட்டம்; பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா

இமயமலை அடிவார நாடான நேபாளத்தை ஆண்டுவரும் கே.பி.சர்மா ஒலி அரசு, நாட்டில் சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. அதாவது நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் அனைத்து சமூக வலைத்தளங்களும் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதற்காக 7 நாட்கள் கெடு விதித்து கடந்த மாதம் 28-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அரசின் இந்த உத்தரவை ஏற்று பல சமூக ஊடகங்கள் பதிவுக்கு நடவடிக்கை எடுத்து உள்ளன. ஆனால் 26 சமூக ஊடக தளங்கள் இந்த பதிவை செய்யவில்லை. எனவே அந்த சமூக வலைத்தளங்களை கடந்த 4-ந் தேதி நள்ளிரவு முதல் நேபாள அரசு தடை செய்தது.

அதன்படி பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட முக்கிய சமூக வலைத்தளங்கள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டன.இது வலைத்தளவாசிகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் தங்கள் வியாபாரத்துக்காக சமூக வலைத்தளங்களை சார்ந்திருக்கும் ஆயிரக்கணக்கானோர் அரசின் இந்த தடையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதைப்போல வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் படிக்க சென்றுள்ள மாணவர்கள் மற்றும் வேலைக்கு சென்றிருப்போரும் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே நேபாள அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க இளைஞர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைய தலைமுறையினர் திட்டமிட்டனர். இதற்காக தடையில் சிக்காத டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமும், மேலும் பல்வேறு வழிகள் வாயிலாகவும் ஏராளமானோரை திரட்டினர்.பின்னர் பல்வேறு இடங்களில் இருந்து நேற்று தலைநகர் காட்மாண்டை நோக்கி பேரணியாக சென்றனர். அங்கே நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு முன்பு திரளாக குவிந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய தலைமுறையை குறிக்கும் ‘ஜென் சி’ என்ற பெயரிலான பதாகையை ஏந்திக்கொண்டு ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். சமூக வலைத்தள தடையை நீக்க வலியுறுத்திய அவர்கள், ஆளும் தலைவர்களின் ஊழலையும் எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். நாட்டில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தி தீவிரமாக போராடினர்.

ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் செல்ல முயன்றனர். அங்கே வைக்கப்பட்டிருந்த தடைகளை அகற்றிக்கொண்டு உள்ளே செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே பலத்த தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அத்துடன் பெரும் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் பல்வேறு வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கு தீ வைத்தனர். இதனால் போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும், ரப்பர் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை அடக்க முயன்றனர். ஆனால் நிலைமை கைமீறி போகவே வன்முறையாளர்கள் மீது போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர்.  வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் பாதுகாப்பு படையினர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள சிவில் ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். எனினும் உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நேபாள அரசு இதுவரை வெளியிடவில்லை. பேராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தலைநகரில் ராணுவமும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

போராட்டம் நாடு முழுவதும் பரவிய சூழலில், சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாடு விலக்கி கொண்டது. ஆனாலும் கோபம் தணியாத இளைஞர்கள் இன்று மீண்டும்  போராட்டம், வன்முறையில் களம் இறங்கி உள்ளனர். ஊழலுக்கு எதிராகவும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளதால் நேபாளம் நாடெங்கும் அமைதியற்ற சூழல் காணப்படுகிறது. போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக், வேளாண் அமைச்சர் ராம்நாத் அதிகாரி, நீர்வளத்துறை அமைச்சர் யாதவ் ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டனர். நிலைமை கட்டுக்கடங்காத நிலையில் போராட்டக்காரர்கள் அதிபர் ராம் சந்திரி பவுடெல் இல்லத்தை சூறையாடி இருக்கின்றனர். ராஜினாமா செய்த உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் வீட்டையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர்கள் புஷ்பகமல் தாஹல் என்னும் பிரசந்தா மற்றும் ஷேர் பகதூர் டியுபா, எரிசக்தி துறை அமைச்சர் தீபக் கட்கா ஆகியோர் இல்லங்களும் போராட்டக்காரர்களின் பிடியில் இருந்து தப்பவில்லை. அமைச்சர்கள் பலரும், ராணுவ ஹெலிகாப்டர்களில் மீட்கப்படுகின்றனர். நாட்டின் பல பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே நேபாள உள்துறை மந்திரி உள்ளிட்டோர் பதவி விலகிய நிலையில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுத்துவரும் நிலையில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நிலைமையை சமாளிக்க முடியாமல் இருக்கும் பிரதமர் சர்மா ஒலி, நாட்டை விட்டு வெளியேற இருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகி வருகிறது. உடல் நலம் குன்றி இருக்கும் அவர் சிகிச்சைக்காக துபாய் செல்ல இருப்பதாகவும், அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற உள்ளதாகவும், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நேபாள பிரதமர் வெளிநாடு தப்பிச்செல்ல இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து காட்மாண்டு சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

error: Content is protected !!