திருச்சியில் நிருபர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசினார். “தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே கூட்டணி குறித்து அறிவிப்பேன். பாஜக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கூட்டணிக்குள் இணைக்க முடியாது” என்று தெரிவித்தார். கொள்கைக்கு உடன்படும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்று உறுதியாக கூறினார்.
தவெகவில் இருந்து வெளியேறிய செங்கோட்டையன் “விஜய்க்காக உயிரையும் விடுவேன்” என்று கூறியது குறித்து பேசிய தினகரன், “அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்த போது தனக்கு ஒரு கட்சியில் அங்கீகாரம் கிடைத்திருப்பதாக பெருமையாக நினைப்பதாகத்தான் நான் பார்க்கிறேன்” என்று தெரிவித்தார். அதே சமயம், நேற்றிரவு முசிறியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரனை அறிமுகம் செய்து வைத்து பேசிய தினகரன், “50, 80 இடங்கள் வேண்டும் என நிர்பந்தம் செய்ய மாட்டோம். எதார்த்த சூழலை உணர்ந்து கூட்டணி தர்மத்தின்படி செயல்படுவோம்” என்றார்.
அமமுகவின் வளர்ச்சி 8 ஆண்டுகளில் 50-75 ஆண்டுகள் பழமையான கட்சிகளை விட சிறப்பானது என்று பெருமிதம் தெரிவித்தார்.“200 தொகுதிகளில் கட்சி வலிமையாக உள்ளது. வரும் ஆட்சியில் அமமுக நிச்சயம் பங்கு பெறும். தகுதியுள்ள வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அவர்களின் வெற்றிக்கு நான் முழுமையாகத் துணை நிற்பேன்” என்று உறுதியளித்த தினகரன், கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், கூட்டணி உறுதியாகாத நிலையில் அமமுக வேட்பாளரை அறிவித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினகரனின் இந்த பேச்சு அமமுகவின் சுயாதீன நிலைப்பாட்டையும், கூட்டணி உத்தியையும் வெளிப்படுத்தியுள்ளது. 2026 தேர்தல் களத்தில் அமமுகவின் பங்கு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

