Skip to content

எந்த ‘குறி’யாக இருந்தாலும் கவலையில்லை- விஜய் பேச்சுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

 தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், சமூக வலைதளங்களில் த.வெ.க. ஆதரவாளர்களை “தற்குறிகள்” என்று விமர்சிக்கும் நெட்டிசன்களை கடுமையாக சாடினார். “அதென்னப்பா அது… தற்குறியா!” என்று சிரித்துக்கொண்டே கேப் விட்ட விஜய், “நமது கட்சிக்கு ஆதரவு தரும் லட்சக்கணக்கான தொண்டர்கள், Gen Z தலைமுறை இளைஞர்களை ‘தற்குறிகள்’ என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். இப்போது அவர்களே மாற்றிப் பேசுகிறார்கள்” என்று விமர்சித்தார்.

இது திமுக ஆதரவாளர்களின் சமூக ஊடக தாக்குதல்களுக்கு நேரடி பதிலாக அமைந்தது. தொடர்ந்து பேசிய விஜய், “மறுபடியும் சொல்கிறேன், நான் அரசியலுக்கு வந்தது உங்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டும்தான். நமக்கு கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார் என்பதை திட்டவட்டமாக சொல்லிவிட்டேன். சொன்னால் செய்யாமல் விடமாட்டேன். நமக்கு அரசியல் புரிதல் இல்லை என்று விமர்சித்தவர்கள், மக்களின் வாக்குகளை வாங்கியவர்கள்தான் யாரு? அதே மக்களுக்கு நீங்கள் காட்டும் மரியாதை இதுதானா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து, திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, விஜயின் இந்தப் பேச்சுக்கு பதிலளித்து, “விஜய் ஆச்சரியக்குறியாக இருந்தாலும் சரி, தற்குறியாக இருந்தாலும் சரி, எங்களுக்கு தேர்தல் வெற்றி மட்டுமே குறி. எந்த ‘குறி’யாக இருந்தாலும் கவலையில்லை” என்று கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுகவுக்கு யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. யாரோடும் எங்களுக்கு பகை இல்லை. விஜய் தனது தரத்தைக் குறைத்துக்கொள்வது அவரது விருப்பம்; அதற்கு நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டியதில்லை” என்று தெளிவுபடுத்தினார். இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுக-த.வெ.க. இடையேயான அரசியல் மோதலை தீவிரப்படுத்தியுள்ளது. விஜயின் பேச்சு த.வெ.க. தொண்டர்களிடம் ஆதரவைப் பெற்றுள்ளது, ஆனால் திமுக ஆதரவாளர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!