திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் நேர்காணல் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது:
அமலாக்கத்துறையை வைத்துக் கொண்டு எல்லாரையும் மிரட்டுகிறார்கள். நீதிமன்றத்தில் தடையாணையை வாங்கி இருக்கிறோம். என்ன நீதியோ அதை நீதிமன்றத்தில் கிடைக்கப்போகிறது. குற்றச்சாட்டை உற்பத்தி செய்து அமலாக்கத்துறையை வைத்து இமேஜை குறைக்க பார்க்கிறார்கள். நீதிமன்றம் நியாயத்தை வழங்கியிருக்கிறது.
புதுக்கோட்டையில் திமுக நிர்வாகிகள் இடையே உட்கட்சி பூசல் உள்ளதா என்றுகேட்டபோது,
கட்சியில் சிறிய சிறிய பிரச்சனைகள் இருக்கும். அதை தலைமை கழகத்தில் கூறி சரி செய்து கொள்வோம்.
கடந்த முறை போலவே இந்த முறையும் டெல்டா முழுவதும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. யார் எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் டெல்டா முழுவதும் திமுக தான் வெற்றி பெறும் .
இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.
அமைச்சர் நேரு மேலும் கூறியதாவது:
அடுத்த மாதம் ஜூன் 14 ம் தேதிக்கு பிறகு பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு இயங்க தொடங்கிவிடும்.
எங்கெங்கு தண்ணீர் தேங்குகிறதோ அங்கெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். நகராட்சி,மாநகராட்சி இணைந்து பணியாற்றி வருகிறோம்.
முசிறி உள்ளிட்ட பகுதிகளுக்கு
கூட்டுக் குடிநீர் திட்டம் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது, விரைவில் முசிறி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கப்படும்.
காற்று அதிகமாக வீசுவதால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. அது வழக்கம்தான். அதனை உடனடியாக சரி செய்ய முயற்சித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.