Skip to content

88 வயதில் புதிய கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ‘எம்ஜிஆர் அதிமுக’ என்ற புதிய கட்சியைத் துவங்கியுள்ளார்.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதியின் அமைச்சரவையில் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் முதலில் திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். 1967ல் திமுக எம்எல்ஏ ஆன நிலையில் 1971ல் மீண்டும் பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் 1977ல் அதிமுகவில் இணைந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அங்கிருந்து பாமகவுக்குச் சென்றார். பின்னர் மக்கள் நலவுரிமைக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய நிலையில் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது தனது கட்சியை கலைத்துவிட்டு தேமுதிகவில் இணைந்தார்.
தொடர்ந்து மீண்டும் அதிமுகவில் இணைந்த அவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஆதரவாளராகவும் பின்னர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும் இருந்துள்ளார். தற்போது தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்து ஓபிஎஸ் முடிவெடுக்காததாலும் ஓபிஎஸ் அணியின் செயல்பாடுகளில் கருத்து வேறுபாடு உள்ளதாலும் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக பண்ருட்டி ராமச்சந்திரன் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அவரது 88 வயதில் ‘எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது என்றும் ஒத்த கருத்துடையவர்களுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிப்போம் என்றும் கூறியுள்ளார்.
வரும் 23 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் கட்சியின் அறிமுக விழா நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அத்தியாயம் முடிந்தது எனவும் ஓபிஎஸ் உடன் பழகியதற்காக வாழ்நாளை வீணாக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!