இன்று அதிகாலை 2.30 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு ஏ.கே. 29 என்ற ஏர் ஏசிய விமானம் பயணிகளுடன் திருச்சி வந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து வரும் போது விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணிக்கு திடீரென்று கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் பரிதபமாக இறந்தார்.திருச்சி சர்வதேச விமான நிலையத்தில்
விமானம் தரை இறங்கிய பிறகு பயணிகள் ஒவ்வொருவராக விமானத்திலிருந்து கீழே இறங்கினார். இந்நிலையில் ஒரு பயணி மட்டும் விமானத்திலிருந்து இறங்காமல் இருக்கையிலேயே அமர்ந்திருந்தார். இதையடுத்து சந்தேகமடைந்த விமான ஊழியர் அருகில் சென்று பார்த்த பொழுது அவர் மயங்கிய நிலையில் இருந்ததாக நினைத்துக் கொண்டு உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து மருத்துவ குழுவினர் விரைந்து சென்று இருக்கையில் இருந்த பயணியை பரிசோதனை செய்து பார்த்தனர். அப்பொழுது அவர்
மாரடைப்பால் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிய வந்தது. மேலும் இறந்த பயணி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளின் பட்டியலை பரிசோதனை செய்து பார்த்தனர். அப்பொழுது இறந்த பயணி பெயர் சசிகுமார் (வயது 43 ) என்பதும்,அவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிராம பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் இவர் விமானத்தில் பயணம் செய்த போதே இறந்து வந்துள்ளார் என்று தெரிய வந்தது. இதையடுத்து விமான நிலைய மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து இறந்துவிட்டார் என்று சான்றளித்தனர். பிறகு அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் முதற் கட்ட விசாரணை நடத்திய போது சசிகுமாரை வரவேற்பதற்காக எவரும் வரவில்லை என்றும். அவர் விமான டிக்கெட் பதிவு செய்யும் பொழுது கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டதில் அந்த தொலைபேசி எண்கள் உபயோகத்தில் இல்லை என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரி ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகார் எண் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி நடுவானில் இறந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
