பெரம்பலூர் அருகே கொளத்தூரில் இன்று காலை பிரமாண்ட ஜல்லிக்கட்டு நடந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளத்தூர் கிராமம் குப்பன் ஏரியில் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் ஏற்பாட்டில் இன்று (2ம் தேதி) காலை 7.35 மணிக்கு பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. கலெக்டர் கிரேஸ் பச்சாவ், எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமை வகித்தனர். இதற்காக பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன.
காலை 7.35 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டியைபோக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் எம்எல்ஏ.எம்.பிரபாகரன், ஆகியோர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து துவக்கி வைத்தனர். சப்-கலெக்டர் கோகுல், ஆனந்தகுமார், டி.சி.பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதலாவதாக வாடி வாசலில் இருந்து கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து மற்ற ஊர் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், கட்டில், பீரோ,மெத்தை, சேர், மிக்சி, எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. வாடிவாசல், மேடை, பார்வையாளர்களுக்கு இருபுறமும் கேலரி ஆகியவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டது.
