திருச்சி காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அண்மையில் எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு காவல்துறைக்கு ஒரு எச்சரிக்கை தகவல் வந்தது. அதில் ‘100’ அவசர அழைப்பைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத ஒருவர் ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் ஏறி உள்ளே குதித்ததாக வந்த தகவலின் பேரில் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் காவலர் சுல்தான் உள்ளிட்ட போலீசார் நிகழ்விடம் சென்றனர்.
அப்பகுதியில் போலீசார் இருட்டில் சோதனை செய்து கொண்டிருந்த போது, சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த அப்பகுதியைச் சேர்ந்த குடிவாசி ஒருவர் போலீசாரிடம் விவரம் கேட்டறிந்தார். பின்னர் போலீசாருக்கு உதவும் வகையில், அவர் ஒரு டார்ச்லைட்டை எடுத்து, அதை காவலர் சுல்தானிடம் கொடுத்து உதவுமாறு தனது மகளிடம் கூறினார். அந்தப் பெண் டார்ச் லைட்டை கொடுத்தபோது, சுல்தான் அவரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண் தனது தந்தையிடம் தெரிவித்தார். தந்தை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இது குறித்து தகவலறிந்த காவல் ஆணையர் ந. காமினி முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, காவலர் சுல்தானை புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
