புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியத்தை சேர்ந்தவர் முருகேசன். ,இவரது மனைவி ராணி. இவர்கள் புதுக்கோட்டை பாசில் நகரில் வசித்து வருகிறார்கள். நேற்று முருகேசன் குடும்பத்தோடு வெளியூாில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று விட்டார். அதை அறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 160 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை அள்ளி சுருட்டிக்கொண்டு தப்பி விட்டனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு மட்டும் ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
போகும்போது மோப்பநாய் துப்பு துலக்காமல் இருக்கவும், கைரேகைகள் பதிவு செய்யப்படாமல் இருக்கவும், பீரோ மற்றும் வீடு முழுவதும் மிளகாய்பொடி தூவி விட்டு கொள்ளையர்கள் சென்று உள்ளனர். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைரேகை நிபுணர்களும் கைரேகைகளை ஆய்வு செய்தனர். அந்த தெருவில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.