Skip to content

ரிலையன்ஸ் மோசடி வழக்கு: மீண்டும் விசாரணைக்கு வராத டினா அம்பானி

ரிலையன்ஸ் நிறுவன பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் டினா அம்பானி விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வங்கிகளில் வாங்கிய 40,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2023ம் ஆண்டு நியூயார்க் நகரில் உள்ள விலையுயர்ந்த சொகுசு பங்களா முறைகேடாக விற்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு பணப்பரிமாற்ற முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தொழிலதிபர் அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானிக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே கடந்த 10ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது. அந்த விசாரணையை அவர் தவிர்த்த நிலையில், இன்று நடந்த இரண்டாவது விசாரணையிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் அவருக்கு விரைவில் மூன்றாவது முறையாக சம்மன் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் அனில் அம்பானி நாளை (பிப்.18) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த சம்மன் குறித்து ரிலையன்ஸ் குழுமம் சார்பில் முறையான கருத்துகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

error: Content is protected !!