சென்னை செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்டர் என்கிற காமராஜ் (54). இவர், வீட்டிலேயே சர்ச் நடத்தி வருகிறார். மேலும், சோழவரம் பகுதியில் பள்ளி மாணவ – மாணவியருக்கு, காமராஜ் டியூஷன் எடுத்து வந்துள்ளார். இங்கு வரும் மாணவியரிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மாணவியரின் பெற்றோர் செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் பரணி, மதபோதகர் காமராஜிடம் விசாரணை மேற்கொண்டார்.மேலும், அவரது மொபைல் போனை சோதனை செய்ததில், ஆபாச படங்களும் சிலரது புகைப்படங்களும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பாலியல் வன்கொடுமை குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டமான ‘போக்சோ’வில், காமராஜை போலீசார் கைது செய்தனர். பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
