தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மன்மோகன்சிங் தலைமையில் 2004-ம் ஆண்டு அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற வகையில் கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் வறுமையை ஒழிக்கின்ற நோக்கத்தில் 2006-ம் ஆண்டில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு அக்டோபர் 2009 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காக தமது வாழ்நாளில் பெரும் பகுதியை தியாகம் செய்த மகாத்மா காந்தியடிகளின் பெயரை அத்திட்டத்திற்கு சூட்டுவது பொருத்தமாக அமைந்தது.
ஓராண்டில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிற நோக்கம் கொண்டது இத்திட்டம். இத்திட்டத்தினால் கோடிக்கணக்கான கிராமப்புற பெண்களும், பட்டியலின மக்களும் உறுதியான ஊதியத்தினால் வறுமையிலிருந்து வெளியேறுகிற வாய்ப்பு வழங்கப்பட்டது. அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு போதுமான நிதியை ஒதுக்கியதால் கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றிய புரட்சிகரத் திட்டம் என பாராட்டப் பெற்றது. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிர முனைப்பு காட்டியவர் அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆலோசனைக் குழு தலைவராக இருந்த சோனியா காந்தி.
கிராமப்புற மக்களின் குறைந்தபட்ச ஊதிய பாதுகாப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்கிற பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என்று பெயர் மாற்றம் செய்வதற்கு வருகிற மக்களவை கூட்டத் தொடரில் மத்திய பா.ஜ.க. அரசு மசோதாவை தாக்கல் செய்யப் போவதாக செய்தி வெளிவந்திருக்கிறது. மோடி தலைமையிலான அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி பல நேரங்களில் காந்தியடிகளை புகழ்ந்து பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தாலும் மகாத்மா காந்தியின் புகழை சிதைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலினால் இத்தகைய நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது.
கடந்த மக்களவை கூட்டத்தொடரின்போது இந்தியாவின் பிரதமராக 17 ஆண்டுகாலம் பதவி வகித்து இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற காரணத்தால் நவஇந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பா.ஜ.க. தலைவர்கள் இழிவுபடுத்தி பேசினார்கள். இதற்கு நேரு பாரம்பரிய பெருமையை காப்பாற்றுவதில் முன்னணிப் பங்கு வகித்து வருகிற பிரியங்கா காந்தி அவர்கள் மக்களவையில் உரையாற்றும்போது இதை கடுமையாக விமர்சித்து பா.ஜ.க.வினரின் அவதூறுகளை முறியடித்தார். நேரு அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் அமித்ஷா உள்ளிட்டவர்கள் திக்குமுக்காடி போனார்கள்.

