உத்தரபிரதேசம் ஏட்டா மாவட்டம் கிராதாபாத் கிராமத்தை சேர்ந்தவர் அட்டர் சிங் (62). இவர் உத்தரபிரதேச காவல்துறையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப்பின் அட்டர் சிங் தனது மகன்களுடன் கிராதாபாத் கிராமத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில், அட்டர் சிங் இன்று தனது 2 மகன்களுடன் கிராமத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது தோட்டத்தில் இருந்த தேனீக்கள் தீடிரென அட்டர் சிங் மற்றும் 2 மகன்களை சரமாரியாக கொட்டியது. தேனீக்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க அனைவரும் அங்கும் இங்கும் ஓடினர். ஆனாலும், அட்டர் சிங் மீது தேனீக்கள் அதிக அளவில் கொட்டின. தேனீக்கள் கொட்டியதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அட்டர் சிங் தோட்டத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அட்டர் சிங்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

