Skip to content

கல்குவாரியை மூடக்கோரி சாலை மறியல்…..திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அம்மாசத்திரம் அருகே உள்ள கோப்புலிக்காட்டில் தனியார் கல்குவாரி ஒன்று, கடந்த 17 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் இருந்து வெளியேறும் மாசு மற்றும் எந்திரங்களின் இரைச்சல் காரணமாக சுற்றுவட்டாரத்தின் கிராம மக்கள் பெரிதும் பாதிப்படைகிறார்கள். இங்கு வைக்கப்படும் வெடியால்  சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுகிறது. வீடுகளில் வசிக்க முடியாமலும்,  விவசாயம் செய்ய முடியாமலும் மக்கள் தவித்து வருகின்றனர்.  இதனால் இந்த கல்குவாரியை  நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து பல்வேறு அரசு அலுவலங்களிலும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால்,  ஆவேசம் அடைந்த மக்கள், இன்று திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் அம்மாசத்திரம் விளக்கு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இந்த தகவல் அறிந்து இலுப்பூர் ஆர்டிஓ குழந்தைசாமி மற்றும் கீரனூர் போலீஸார்  சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குழு அமைத்து விசாரணை செய்வதன் மூலம் கல்குவாரியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இந்த சாலை மறியல் காரணமாக திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!