கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றி வரும் டிப்பர் லாரிகளை வழிமறித்து, ஒரு கும்பல் சட்டவிரோத பண வசூலில் ஈடுபட்ட சம்பவம் மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் செங்கல், மணல் மற்றும் ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல அரசு முறையாக அனுமதிச் சீட்டு வழங்கி வருகிறது. இந்நிலையில், மலுமிச்சம்பட்டி சாலையில் லாரிகளை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று, “அரசு அனுமதிச் சீட்டு செல்லாது, ராயல்டி கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை கூடுதல் பணம் செலுத்தினால் மட்டுமே லாரிகளை அனுமதிப்போம்” என மிரட்டியுள்ளது.
முறையான ஆவணங்கள் இருந்தும், வழிப்பறி பாணியில் மிரட்டிப் பணம் கேட்பதை அறிந்து ஆத்திரமடைந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அந்தப் பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு பதற்றம் நிலவியது. தகவலறிந்து வந்த கனிமவளத் துறை அதிகாரிகள், லாரிகளின் ஆவணங்களைச் சோதித்து அவை அனைத்தும் சரியானவை என்பதை உறுதி செய்து, லாரிகளை விடுவிக்க உத்தரவிட்டனர்.
அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருடன் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்கள், “மாவட்டம் முழுவதும் பல இடங்களில் இதேபோல் ‘ராயல்டி’ என்ற பெயரில் ரசீது இன்றி லாரிக்கு 1,000 ரூபாய் வரை மிரட்டிப் பறிக்கின்றனர். இதன் மூலம் நாளொன்றுக்கு கோடிக்கணக்கில் முறைகேடு நடக்கிறது. அரசு அனுமதி இருந்தும் எங்களை ஏன் அலைக்கழிக்கிறீர்கள்?” என அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தனர்.
மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளதால், அப்பகுதியில்நீண்ட நேரம் பதற்றம் நிலவியது.

