சேலம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் , இன்று நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:
ஒரு குவிண்டால் நெல் சாjhரண ரகத்திற்க இனி ரூ. 131ம், சன்ன ரகத்திற்கு இனி 156 உயர்த்தியும் கொள்முதல் செய்யப்படும். அதாவது சாதாரண ரகம் குவிண்டால் 2500க்கும், சன்னரகம் 2548 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும். இதன் மூலம் 10 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள்.
மிக பிரமாண்டமாக இந்த விழாவை ஏற்பாடு செய்தவர் அமைச்சர் ராஜேந்திரன் அவர் மாணவராக இருந்தபோது அரசியலில் நுழைந்தவர்., 83ல் இருந்து இப்போது வரை என்னோடு பயணிக்கிறார். சேலத்து மாங்கனி போன்று இனிமையானவர், இரும்பை போல உறுதியானவர். அவர் அமைச்சரான பிறகு நடக்கும் முதல் அரசு விழா. பர்ஸ்ட் என்பதை விட பர்ஸ்ட் கிளாஸ் என சொல்லும் அளவுக்கு செய்துள்ளார்.
அதுபோல சேலத்தின் வளர்ச்சிக்கு உழைப்பவர் கலெக்டர் பிருந்தா தேவி அவர்கள். தமிழ்நாட்டில் சிறப்பாக பணியாற்றும் கலெக்டர்களில் பிருந்தா தேவியும் ஒருவர். அவரது தலைமையின் கீழ் பணியாற்றும் அத்தனை அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள்.
சேலம் உருக்காலை, ரயில்வே கோட்டம், சேலம், ஆத்தூர் மகளிர் கல்லூரிகள், பெரியார் பல்கலைக்கழகம், பாதாள சாக்கடை திட்டம் ஏத்தாப்பூர் மரவள்ளி. ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், 9 உழவர் சந்தைகள், சேலம்- ஆத்தூர் குடிநீர் திட்டம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், மேட்டூர் மின்திட்டம், 4 வழிச்சாலை, சேலம் கலெக்டர் அலுவலகம், சேலம் விமான நிலையம் என பல திட்டங்களை இந்த மாவட்டத்துக்கு கொண்டு வந்தது தான் நம்முடைய கலைஞர் ஆட்சி.
119 ஏக்கர் பரப்பில் ஜாகீர் அம்மாபாளையத்தில் ஜவுளி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்த விழாவிலும் 6 புதிய அறிவிப்புகளை இந்த விழாவில் வெளியிடுகிறேன்.
சேலம் மாநகராட்சியில் 100 கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.
செவ்வாய்ப்பேட்டை சந்தை மேம்படுத்தப்படும், சங்ககிரியில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும்.
நரசிங்கபுரம், மேட்டூரில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்படும். தாரமங்கலம், இடைப்பாடி, ஆத்தூர் நகராட்சியில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
நம்முடைய திட்டங்களை சிலரால் தாங்கி கொள்ள முடியவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் மதுரைக்கு வந்தார். அவர் அரசியல் மட்டும் பேசியிருந்தால் பரவலாயில்லை. ஆானால் நம்முடைய ஆட்சியை குறை சொல்லி ஆத்திரத்தை கொட்டி தீர்த்துள்ளார்.
ஒன்றிய அரசின் திட்டங்களை மடைமாற்றி, மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்வதாக கூறி உள்ளார். ஆனால் உண்மையில் நடப்பது என்ன? வீடு கட்டும் திட்டம், குடிநீர் திட்டங்களுக்கு மத்திய அரசை விட மாநில அரசு தான் அதிக நிதி கொடுக்கிறது.
பிரதமரின் திட்டத்திற்கும் மாநில அரசு தான் 50 % நிதி கொடுக்கிறது. படையப்பா படத்தில் ஒரு காட்சி வரும். மாப்ள அவருதான், ஆனால் அவர் போட்டு இருக்கும் சட்டை என்னுடையது என்பது போல ….. மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசு தான் நிதி கொடுக்கிறது.
அமித்ஷா அவர்களே…..மதுரை வந்தீர்களே , மதுரை எய்ம்சை போய் பார்த்தீர்களா, திராவிட மாடல் ஆட்சியின் 4 ஆண்டுகளில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டி உள்ளோம். இது தான் பிஜேபிக்கும், திராவிட மாடல் அரசுக்கும் வித்தியாசம். எந்த ஒரு சிறப்பு திட்டத்தையும் மத்திய அரசு நமக்கு வழங்கவில்லை.
மதுரையில் நீங்கள் ஆஸ்பத்திரி கட்டுகிறீர்களா, அல்லது விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கட்டுகிறீர்களா, அஸ்பத்திரி கட்ட 10 வருடமா? 2 வருடத்தில் கட்டி முடிக்கலாம்.
உங்கள் 11 வருட ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தீர்கள்? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். காங்கிரஸ் ஆட்சியில் ஒதுக்கிய நிதியைும், இப்போதுள்ள நிதியைும் ஒப்பிட்டு பேசி உள்ளீர்கள். அப்போதுள்ள பணமதிப்பு என்ன், இப்போதுள்ள பண மதிப்பு என்ன?
கீழடி ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டோம். தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு தொன்மை குறித்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டோம்பாராட்ட வேண்டாம். ஆனால் அதை மறைக்க முயற்சி செய்கிறார்கள். தமிழர்களின் தொன்மையை அழிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. இதை எடப்பாடி தட்டிகேட்கவில்லை. தமிழ்நாட்டை புறக்கணிக்கிறார்கள். அதனால் உங்களை தமிழக மக்கள் புறக்கணிக்கிறார்கள். நிச்சயம் புறக்கணித்து கொண்டு தான் இருப்பார்கள்.
இந்த நிலையில் கூட்டணி ஆட்சி என்கிறார்கள்.தமிழ்நாட்டு உரிமைகள் பறிபோவதை தட்டிக்கேட்டீர்களா? , டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக உள்ளார். சுயநலத்துக்காக சொந்த கட்சியையே அடமானம் வைத்த எடப்பாடி எப்படி பேசுவார்.?
இவ்வாறு முதல்வர் பேசினார்.
