திருச்சியை அடுத்த துவாக்குடி என்ஐடி குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் கோகுல்நாத் (43) இவர்வீட்டு உணவு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மனுஷா இவர் திருச்சியில் உள்ள என்ஐடி யில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 1ந்தேதி ஆங்கில புத்தாண்டு அன்று இருவரும் காரில் திருவரங்கம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். பிறகு மேலூர் ரோடு பகுதியில் காரை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்று விட்டனர். பிறகு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் கோவிலில் இருந்து வெளியே வந்து காரில் ஏற முயன்றனர். அப்போது காரின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கணவன் மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு கார் கதவை திறந்து உள்ளே பார்த்த போது பின் சீட்டில் இருந்த மடிக்கணினி ரூபாய் 9000 பணம் மற்றும் 20 கிராம் தங்க வளையல் மற்றும் வங்கி காசோலை புத்தகம் ஆகியவை திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பிறகுதான் அவர்களுக்கு மர்ம ஆசாமிகள் யாரோ காரின் பின்பக்க கதவை உடைத்து திருடிச் சென்று இருப்பது தெரிய வந்தது .
இதை தொடர்ந்து திருவரங்கம் போலீசில் கோகுல்நாத் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்து இரண்டரை பவுன் நகை மற்றும் 9 ஆயிரம் பணம் மடிக்கணினி போன்றவற்றை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

