உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வந்தது. போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெரிய தேனீக்கள் கூட்டம் மைதானத்திற்குள் புகுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த வீரர்கள், நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களைத் தேனீக்கள் மூர்க்கத்தனமாகத் தாக்கத் தொடங்கின.
எதிர்பாராத இந்தத் தாக்குதலால் மைதானத்தில் இருந்த அனைவரும் அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். வீரர்கள் மைதானத்தில் படுத்துத் தப்பிக்க முயன்றனர். ஆனால், களத்தில் நின்றிருந்த 65 வயதான நடுவர் மாணிக் குப்தாவால் அந்தத் தாக்குதலில் இருந்து உடனடியாகத் தப்பிக்க முடியவில்லை. தேனீக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கடுமையாகக் கொட்டின.
தேனீக்கள் கொட்டியதில் படுகாயமடைந்த மாணிக் குப்தாவை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால், மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் மற்றொரு நடுவரான ஜெகதீஷ் சர்மாவும் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தார். அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் மைதானத்தில் இருந்த வேறு சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
உயிரிழந்த மாணிக் குப்தா கடந்த 30 ஆண்டுகளாகக் கான்பூர் கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து பணியாற்றி உள்ளார். உள்ளூர் அளவில் நடைபெற்ற பல்வேறு முக்கியமான போட்டிகளில் அவர் நடுவராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்தில் புகுந்த தேனீக்கள் கூட்டம் தாக்கியதில் நடுவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு மைதானங்களில் அவ்வப்போது தேனீக்கள் குறுக்கிடுவது வழக்கம்தான். ஆனால், உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் தேனீக்கள் நடத்திய தாக்குதல் கிரிக்கெட் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

