திருச்சி மாவட்டம், முசிறி அருகே காமாட்சிபட்டி குடித்தெருவை சேர்ந்தவர் அமராவதி (75) கணவனை இழந்தவர். இவரது மகன் வேலுமணி (47). கூலி வேலை செய்து வந்தவர் தற்போது வேலைக்கு எதுவும் செல்லாமல் குடித்துவிட்டு ஊதாரித்தனமாக ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் அமராவதி மகன் வேலுமணியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேலுமணி வாசலில் படுத்திருந்தபோது கட்டையால் தாய் அமராவதியின் தலையில் அடித்து கொன்றுள்ளார். பின்னர் எதுவும் தெரியாதது போல வீட்டுக்குள் சென்று படுத்து உறங்கியுள்ளார். மூதாட்டி ரத்த
காயத்துடன் இறந்து கிடப்பது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் முசிறி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவஇடத்திற்கு சென்ற முசிறிபோலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லதுரை தலைமையிலான போலீசார் அங்கிருந்த வேலுமணியை கைது செய்தனர். மேலும் மூதாட்டி அமராவதி உடலை பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முசிறி அருகே குடித்துவிட்டு ஊர் சுற்றியதை கண்டித்த தாயை மகனே கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.