ஆடி மாத சஷ்டியை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதிகளில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயக ஆலயத்தில் ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமிக்கு ஆடி மாத சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால்,தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகபெடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பாலமுருகனுக்கு
பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சி அளித்தார். தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் சுவாமிக்கு அர்ச்சனை செய்தார். பின்னர் தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் தேர் வீதி விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய பாலசுப்பிரமணியசுவாமிக்கு நடைபெற்ற ஆடி மாத சஷ்டி அபிஷேக மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.