திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையை வாயில் பிளாஸ்டிக் கவரை அடைத்து கடத்த முயன்ற வட மாநில இளைஞரை அங்குள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பகுதி மக்கள் அந்த இளைஞரை மடக்கி பிடித்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அம்பலூர் போலீஸ் ஸ்டேசனிற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் வடமாநில இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரை மனநோயாளி என கூறி ரயில் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் அம்பலூர் காவல்துறையினர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்து ரயில்வே போலீசார் உதவியுடன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மூலம் மேற்கு வங்காளம் தப்பித்துச் செல்ல இருந்த வட மாநில இளைஞர் ரங்கீலா என்பவரை வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.