விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோயில் ஒன்றில் தற்காலிக உதவி அர்ச்சகராக இருந்தவர் கோமதிநாயகம் (30). இவர், சில அர்ச்சகர்களுடன் சேர்ந்து, தனது வீட்டில், டிவியில் சத்தமாக ‘ஊரோரம் புளிய மரம் உலுப்பி விட்டா சலசலக்கும்.. நான் பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமையா…’ பாடலை போட்டு ஆபாச அசைவுகளுடன் நடனம் ஆடியுள்ளனர்.
முன்புறம், பின்புற அந்தரங்க பகுதியை காட்டி இவர்கள் ‘அபிநயம்’ பிடித்து ஆடியுள்ளனர். மேலும், கோயிலுக்கு வந்த சில பெண்கள் முகத்தில் விபூதியையும் ஊதி விட்டு அட்டகாசம் செய்துள்ளனர். இதனை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலானது. இதனை கண்ட பொதுமக்கள், பக்தர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதையடுத்து உதவி அர்ச்சகர் கோமதி நாயகத்தை கோயில் நிர்வாகத்தினர் சஸ்பெண்ட் செய்தனர். இதனிடையே, அர்ச்சகர்களை கைது செய்யக்கோரி, ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பாண்டியராஜ் என்பவர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் கோமதிநாயகம் உள்ளிட்ட 4 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, கோமதிநாயகம் தவிர பிற அர்ச்சகர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்ய நாகர்கோவில், தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்கு தனிப்படை விரைந்துள்ளது. ஆபாச நடனமாடிய உதவி அர்ச்சகர் கோமதிநாயகம் உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோயில் அருகே நேற்று காலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆபாச நடனமாடிய அர்ச்சகர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர்.