நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரத்திற்கு இன்று துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 225 பயணிகள் மற்றும் 11 ஊழியர்கள் என மொத்தம் 236 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் வலதுபுற என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி கவனித்தார்.
என்ஜினில் தீப்பற்றியிருக்கலாம் எனச் சந்தேகித்த விமானி, உடனடியாக அருகிலிருந்த கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தைத் தொடர்புகொண்டு அவசரமாகத் தரையிறக்க அனுமதி கோரினார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாக அனுமதி வழங்கினர்.
இதையடுத்து, விமானம் கொல்கத்தாவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 236 பேரும் எவ்வித காயமுமின்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தற்போது தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தின் என்ஜினைத் தீவிரமாகப் பரிசோதித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பயணிகள் மாற்று விமானம் மூலம் தங்களது பயணத்தைத் தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தத் திடீர் அவசரத் தரையிறக்கத்தால் கொல்கத்தா விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

