கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா நகரில் பிரபலமான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. கோவில் திருவிழாவையொட்டி போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருவிழா பாதுகாப்புப்பணியில் செங்கமனட் போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் ரஞ்சித் நேற்று இரவு ஆலுவா மணப்புரம் மேம்பாலப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த இருவர் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். அவர்களை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் செல்லும்படி போலீஸ்காரர் ரஞ்சித் கூறியுள்ளார்.
அப்போது, போலீஸ்காரர் ரஞ்சித்திற்கும் பைக்கில் வந்த அந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் போலீஸ்காரர் ரஞ்சித்தை பைக்கில் வந்த இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த சக போலீசார் விரைந்து சென்றுள்ளனர். அதற்குள் ரஞ்சித்தை தாக்கிய இருவரும் அங்கிருந்து பைக்கில் தப்பியோடியுள்ளனர்.
இதையடுத்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஞ்சித் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

