புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா மேற்பனைக்காடு அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் சிவராமன் (29). திருமணம் ஆகாதவர். இவர் அதே ஊரில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் சிவராமனின் உறவினர்.
ராஜசேகரனின் மகன் அறிவுக்கரசும்(11), சிவராமனும், நேற்று பேராவூரணி சந்தைக்கு பைக்கில் சென்றனர்.
சந்தையில் பொருட்கள் வாங்கி விட்டு, மீண்டும் பைக்கில் தங்களின் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது பேராவூரணி அரசு மருத்துவமனை எதிரில் சாலையைக் கடக்க முயன்ற போது எதிரே வந்த லாரியின் பக்கவாட்டில் பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிவராமன் மற்றும் அறிவுக்கரசு இருவரும் சிக்கினர். இதில் உடல் நசுங்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லாாி டிரைவர் சதீஷ் கண்ணன்(23) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இவர் ராமநாதபுரம் மாவட்டம் முருகுளத்தூர் தாலுகா கீழசிறுபூர் கிராமத்தை சேர்ந்தவர். தூத்துக்குடியில் இருந்து உர மூட்டைகளை ஏற்றி வந்த இந்த லாரி பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சியில் மூட்டைகளை இறக்கி விட்டு வந்தபோது இந்த விபத்து நடந்தது.
