Skip to content

அரசியலில் ஓய்வு என்பதே கிடையாது… பிரதமர் மோடி உரை

டெல்லி: அரசியலில் ஓய்வு என்பதே இல்லை என மாநிலங்களவையில் பிரியாவிடை பெறும் நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். மாநிலங்களைவில் சில உறுப்பினர்கள் வரும் ஏப்ரம், ஜூலை மாதங்களில் ஓய்வு பெறுகிறார்கள். அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஹரிவன்ஷ் நாராயணன் சிங், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுடன் நிறைவடைகிறது.

தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்பட 20 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 59 மாநிலங்களை உறுப்பினர்கள் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால் பிரியாவிடை பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. விடைபெறக்கூடிய உறுப்பினர்களை வாழ்த்தி பிரதமர் மோடி அவையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது; இந்த அவையில் பல விவாதங்கள் நடைபெற்றுள்ளன. பல இனிமையான மற்றும் கசப்பான அனுபவங்களும் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் இதுபோன்று நம்முடன் இருந்த சில உறுப்பினர்கள் விடைபெறும் போது கட்சி எல்லைகளை தாண்டி நம்மிடையே ஒரு ஒற்றுமை உணர்வு மேலோங்குகிறது.

ஓய்வு பெற இருப்பவர்கள் சிலர் சிறிதுகாலம் ஓய்வு பெற்றுவிட்டு அவைக்கு திரும்ப உள்ளனர். சிலர் இந்த அவைக்கு மீண்டும் திரும்ப போவதில்லை. அப்படி இந்த அவைக்கு மீண்டும் திரும்பாதவர்களுக்கு, சொல்லக்கூடிய விஷயம், என்னவென்றால், அரசியலில் ஓய்வு என்பதே இல்லை. கார்கே, சரத் பவார், தேவ கவுடா ஆகியோர் தங்கள் வயதில் அதிக நாட்களை பொதுவாழ்விற்கு அர்ப்பணித்துள்ளனர்.

தங்களின் அனுபவத்தைக் கொண்டு சமுதாயத்திற்கு சேவையாற்ற அடுத்த கட்ட பயணத்தில் அடியெடுத்து வைக்க உள்ளனர். மூத்த உறுப்பினர்களிடமிருந்து நாம் கற்பதற்கு ஏராளம் உள்ளது. அரசியலில் ‘முற்றுப்புள்ளி’ என்பதே கிடையாது, ஓய்வு பெறுபவர்களின் அனுபவம் சமூகத்திற்கு பயன்படும்” என்றும் பிரதமர் மோடி பேசினார்.

error: Content is protected !!