Skip to content

இனி சமாதானத்துக்கு ஒருபோதும் வழியில்லை – பு.தா.அருள்மொழி!

ஒருபுறம் சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து அன்புமணி மறுபுறம் விழுப்புரம் தைலாபுரத்தில் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளை நீக்கியும், சேர்த்தும் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் கடந்த வாரம் அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணி ஆகிய இருவரை பற்றி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். அப்போது அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக செயல்படுவதாக ஒப்புக் கொண்டால் கட்சியில் நீடிக்க முடியும். இல்லையென்றால் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் அனைத்து விவகாரங்களில் இருந்து நீக்கம் செய்வேன் என்று கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் சென்னை பனையூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தனது ஆதரவாளர்களுடன் கூட்டம் ஓன்றை நடத்தினார். அப்போது ”என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. நான் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்” என்று கூறினார். மேலும், ”உங்களையும் யாராலும் நீக்க முடியாது. நீக்கிய மறு நிமிடம் நீங்கள் மீண்டும் இணைக்கப்பட்டீர்கள் என்ற கடிதம் வந்து சேரும்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நேற்று (ஜூன் 3) திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பேராசிரியர் தீரன், வடிவேல் ராவணன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தைலாபுரம் தோட்டத்துக்கு வருகை தந்து ராமதாஸை சந்தித்ததால் அன்புமணி ராமதாஸ் தரப்பினர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளனர். சமீபத்தில் சென்னையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 3 நாட்கள் வடிவேல் ராவணன், திலகபாமா பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி கூறும் போது, ”பாமக தலைவர் நான் தான் என்பதில் மருத்துவர் ராமதாஸ் உறுதியாக உள்ளார். ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நிலவும் பிரச்சனையில் சமாதானத்துக்கு இனி ஒருபோதும் வழியில்லை.

ராமதாஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்கிறார். தந்தை, மகன் இடையே பிரச்சனை நிலவுவதால் எங்களால் சமரசம் செய்ய இயலவில்லை.” என்று பு.தா.அருள்மொழி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!