சென்னை வானகரம் அடுத்த காரம்பாக்கம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் ஜெயசீலன் என்பவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு திருநெல்வேலிக்கு சென்று இருந்தார். காலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஜெயசீலனுக்கு தகவல் தெரிவித்தனர். தனது வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்த ஜெயசீலன் வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோன்று போரூர் கார்டன் பேஸ் 2 பகுதியில் உள்ள அருண்குமார் என்பவரின் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து 2000 ரூபாய் பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாகவும் வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு விசாரணை செய்த போலீசார் இரண்டு இடங்களிலும் திருட்டு ஈடுபட்டது ஒரே நபர் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலை ஆய்வு செய்து குற்றத்தில் ஈடுபட்டது திருப்பூர் மாவட்டம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ஹாரிஸ் பிலிப்ஸ் என்பதை கண்டறிந்தனர். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 48 கிராம் வெள்ளி, 2600 ரூபாய் ரொக்க பணத்தை மீட்டனர். அத்துடன் இரண்டு கையுறைகள், சிறிய கடப்பாரை மற்றும் டார்ச் லைட்டை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
