திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (46). இவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் இருக்கிறது. இவரது மனைவி மாலதி கடந்த சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவெறும்பூர் தொகுதியில்
போட்டியிட்டார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் குடும்பத்தோடு ரவிச்சந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை சுமார் 3 மணி அளவில் மர்ம நபர்கள் இவரது வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதில் இரண்டு குண்டு வெடித்து சிதறியது. ஒரு குண்டு வெடிக்காமல் கிடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதேப்பகுதியைச் சேர்ந்த 4 பேரை பிடித்து திருவெறும்பூர் போலீசா் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் கீழகல்கண்டார் கோட்டை பகுதியை மிகவும் அருகில் உள்ள பொன்மலை சரகத்திற்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. தற்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கீழகல்கண்டார்கோட்டை மாநகராட்சி பகுதி என்றாலும் பொன்மலை போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் உள்ளது. குறிப்பாக மேலகல்கண்டார்கோட்டை பகுதி பொன்மலை சரகத்திற்குட்பட்டது. அதில் இருந்து 50 மீட்டரில் உள்ள கீழகல்கண்டார்கோட்டை திருவெறும்பூர் போலீஸ் சரகத்திற்குட்பட்டதாகும். கீழகல்கண்டார்கோட்டை பகுதியில் ஒரு குற்றச்சம்பவம் நடந்தால் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வர எப்படியும் 30 முதல் 40 நிமிடம் ஆகும். அதே சமயம் பொன்மலை போலீசார் 10 நிமிடத்தில் சென்று விடலாம். மேலும் மேலகல்கண்டார்கோட்டை பகுதியில் தபொன்மலை போலீசாரின் காவல் உதவி மையம் உள்ளது. அங்கிருந்து 2 அல்லது 3 நிமிடத்தில் கீழகல்கண்டார்கோட்டைக்கு சென்று விடமுடியும். மேலும் திருவெறும்பூர் போலீசார் கீழகல்கண்டார் கோட்டை பகுதிக்கு இது போன்ற சம்பவங்களுக்காக வருவது தான், மற்றபடி ரவுண்ட்ஸ் வருவதில்லை இதன் காரணமாகவே குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் பெரிதும் கவலைப்படுவது இல்லை, எங்கள் பகுதி தீவு போலவே இருக்கிறது என்கின்றனர் பொதுமக்கள்.. இது தொடர்பாக உயர் அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என சுமார் 15 ஆண்டுகாலமாக அவ்வப்போது கோரிக்கை எழும் ஆனால் யாரும் கண்டுக்கொள்வது இல்லை என்கின்றனர் பொதுமக்கள்..