ரயில் விபத்துகளின் போது மீட்புக் குழுவினர் எவ்வாறு துரிதமாக செயல்பட வேண்டும் என்பது குறித்த, தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி, திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் உள்ள குட்ஷெட் யார்டில் இன்று நடைபெற்றது.
இதற்காக ஒரு ஏசி மற்றும் 2 பொதுப்பெட்டிகள் என 3 ரயில் பெட்டிகள் கவிழ்க்கப்பட்டது. இதை விபத்தாகக் கருதி திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. உடனே தளவாட பொருட்கள், அவசர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள், கிரேனுடன் கூடிய விபத்து மீட்பு பொருட்கள், ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து குட்ஷெட் யார்டுக்கு கொண்டு வரப்பட்டது.
திருச்சி ரயில்வே கோட்ட வேளாளர் பாலக் ராம் நெகி, திருச்சி கோட்ட பாதுகாப்பு பிரிவு முதுநிலை அலுவலர் ஸ்ரீதர் தலைமையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 50-க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். விபத்தில் சிக்கிய நபர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்தான துரித செயல்பாடுகளின் ஒத்திகை தத்துரூபமாக நடத்திக் காட்டப்பட்டது.

