Skip to content

ஒரே இரவில் வீழ்ந்த ஈரானின் 2 பெரும் தலைவர்கள்: இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானும், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகளில் உள்ள பகுதிகளை தாக்கி வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி இன்று கூறும்போது, ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியான அலி லரிஜானி நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என கூறினார்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படையின் பசிஜ் துணை ராணுவத்திற்கு தலைமையேற்று, மூத்த ராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தவர் குலாம்ரெசா சுலைமானி. இவர், கூடாரத்தில் தங்கியிருந்தபோது, தாக்கி வீழ்த்தப்பட்டார் என இஸ்ரேல் பாதுகாப்பு படை இன்று தெரிவித்தது. பொதுவாக தலைமையகத்தில் இருக்கும்போது எளிதில், கண்டறிந்து விட கூடாது என்பதற்காக அவர் கூடாரத்தில் சென்று தங்கியுள்ளார்.

எனினும், இஸ்ரேல் அவரை தாக்கியுள்ளது. அவருடைய துணை தளபதியான சையது கரிஷியும் படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இதில், சுலைமானியின் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த பசிஜ் துணை ராணுவம், பல்வேறு வன்முறைகளை பரப்பி விட்டும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை ஆயுதங்களை கொண்டு தாக்கியும் வந்துள்ளது என இஸ்ரேல் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவு தெரிவிக்கின்றது.
ஆனால், ஈரானின் அரசு ஊடகம் இருவரின் படுகொலை தொடர்பான தகவலை உடனடியாக உறுதிப்படுத்தவில்லை. இதுதவிர, ஈரானின் தெஹ்ரான் மற்றும் லெபனானின் பெய்ரூட் நகரங்கள் மீதும் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளோம் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இதில், லெபனானின் தலைநகரில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளது என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

error: Content is protected !!