Skip to content

விஏஓ கொலை வழக்கு – 2 மாதங்களில் முடிக்க மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

கடந்த மாதம் இறுதியில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் 55 வயதான லூர்து பிரான்சிசை, அலுவலகத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில், படுகாயமடைந்த விஏஓ லூர்து பிரான்சிஸ் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராம சுப்ரமணியன், மாரிமுத்து ஆகியோரை காவல்துறை கைது செய்தது.  விஏஓ கொலை வழக்கில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில். புதிய விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் நியமனம் செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து சமீபத்தில், வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் கைதான ராமசுப்பிப்ரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடி முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரி ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த பொன்.காந்திமதிநாதன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!