Skip to content

போர் தீவிரம்: டெக்ரானை விட்டு அனைவரும் வெளியேற டிரம்ப், நெதன்யாகு வேண்டுகோள்

  • by Authour

 ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வருகிறது. 5ம் நாளாக நீடித்து வருகிறது. இதுவரை  ஈரானில் 250க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இஸ்ரேலில் 20க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். இருபக்கமும் கட்டிடங்கள் பெரும் சேதம் அடைந்துள்ளது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர்  டிரம்ப்   ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதில்,  அனைவரும் ஈரான் தலைநகர் டெக்ரானில் இருந்து வெளியேறுங்கள் என கூறி உள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப்  வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகளில் கூறியிருப்பதாவது:  ‘நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். எவ்வளவு அவமானம், எவ்வளவு மனித உயிரை வீணடிப்பது. எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது. நான் அதை மீண்டும் மீண்டும் சொன்னேன். பதற்றங்கள் அதிகரிக்கும்போது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் உடனடியாக டெக்ரானில் இருந்து வெளியேற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கனடா ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட டிரம்பிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு டிரம்ப் பதிலளித்தார். சமீபத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பேசினீர்களா என்று  கேட்டபோது, ‘நான் எல்லோரிடமும் பேசிவிட்டேன்’ என்று பதிலளித்தார்.

மேலும், “ஈரானை ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வலியுறுத்தினேன். ஈரானில் எந்த அணு ஆயுதமும் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினேன். இதற்காக நான் ஈரானுக்கு 60 நாட்கள் அவகாசம் கொடுத்தேன், அவர்கள் இல்லை என்று சொன்னார்கள். 61-வது நாளில் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். விரைவில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகும் அல்லது ஏதாவது நடக்கும். ஆனால், ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்று அவர் கூறினார்.

ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, ​​‘ஈரானில் அணு ஆயுதம் எதுவும் இல்லாமல் இருக்க விரும்புகிறேன்’ என்று டிரம்ப் பதிலளித்தார். இஸ்ரேல் – ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ளதால், டிரம்ப் ஒரு நாள் முன்னதாகவே கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து திரும்பி வருவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்  தெரிவித்தார்.

error: Content is protected !!