Skip to content

உலக புகையிலை ஒழிப்பு தினம்… விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை கலெக்டர்

பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்…

உலக புகையிலை ஒழிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று கோவை மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் துவக்கி வைத்து அவரும் இருசக்கர வாகனத்தை இயக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு புகையிலை ஒழிப்பை வலியுறுத்தும் வண்ணம் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக புகையிலை ஒழிப்பு குறித்தான கையெழுத்து இயக்கத்தை

மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் புகையிலை இல்லா தமிழ்நாடு என்பதை மையமாகக் கொண்டு இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதாகவும் புகையிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறது என்று தகவல் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்காக ஒருங்கிணைந்த கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். அரசு துறை அதிகாரிகள் காவல்துறையினர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் தொடர்ச்சியான சோதனைகள் பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் மேற்கொண்டு வருவதாகவும் சில இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

error: Content is protected !!