மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தி என்ற கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செய்த போது மோதல் ஏற்பட்டது.
இரண்டு சமூகத்தினர்களும் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில் இன்று அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரதுஉருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி கேட்டிருந்தனர்.
இதேபோல் அப்பகுதியில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் அதே பகுதியில் கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் படத்திறப்பிற்கு அனுமதி கோரியுள்ளதால் அப்பகுதியில் மீண்டும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி கோட்டாட்சியர் யுரேகா, மதகடி பகுதியிலிருந்து 1கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 5 நாட்களுக்கு 144 (3) தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நேற்று இரவு 10மணி முதல் 10ம் தேதி நள்ளிரவு 12மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும். இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தை தடுக்க அப்பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
மேலும் கோட்டாட்சியரின் தடை உத்தரவு பிளக்ஸில் பிரிண்ட் செய்யப்பட்டு ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளதுடன், தடை உத்தரவு குறித்து ஆட்டோ களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும் அப்பகுதியை சுற்றிலும் 4 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்தும், 21 இடங்களில் 300க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். வஜ்ரா, வருண் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.