Skip to content

விண்வெளி ஆய்விலும் சாதிக்கும் இந்தியா

விண்வெளி ஆய்விலும் சாதிக்கும் இந்தியா

மக்கள் தொகையில் நம்பர் 1 என்பது மட்டும் இந்தியாவுக்கு பெருமையில்லை.  ஒரு வல்லரசாகவும்,  அறிவியல் தொழில் நுட்பத்தில்  வளர்ந்து வரும்  நாடாகவும் தன்னை  பிரகடனப்படுத்த வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு.

 அந்த வகையில் இப்போது இந்தியா  விண்வெளி ஆய்விலும் சாதனை படைத்து வருகிறது.  ஏற்கனவே நிலவின் தென் தெருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர்  தரையிறக்கப்பட்டது.  2023ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி இந்த சாதனையை  இந்தியா நிகழ்த்தியது . இதுவரை எந்த நாடும்  நிலவின் தென்துருவத்திற்கு சென்றதில்லை.

அந்த வகையில்  விண்வெளியின் மற்றுமொரு சாதனையாக  இந்திய வீரர் ஒருவர்   சர்வதேச விண்வெளி  ஆய்வு மையத்திற்கு நேற்று புறப்பட்டு சென்றார்.

 ஏற்கனவே  கடந்த 1984ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த விங் கமாண்டர் ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்று அங்கு 8 நாட்கள் தங்கி இருந்து ஆய்வுகள் மேற்கொண்டு வெற்றிகரமாக திரும்பி இருக்கிறார்.
41 ஆண்டுகளுக்கு பின்னர், மேலும் ஒரு இந்திய வீரரான சுபான்ஷூ சுக்லா என்பவர்  நேற்று தனது குழுவினருடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு புறப்பட்டு சென்றார்.  சுபான்ஷூ சுக்லா,  உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்.  இந்திய விமானப்படையில்  போர் விமானியாக பணியாற்றுகிறார்.  
இந்திய நேரப்படி நேற்று மதியம்  12  மணி…. ஒரு நிமிடத்திற்கு  அவரது ராக்கெட் அமெரிக்காவின்   புளோரிடாவில் உள்ள   கென்னடி விண்வெளி ஆய்வு  மையத்தில்  இருந்து வெற்றிகரமாக கிளம்பியது.
மோசமான வானிலை,  சிறு சிறு கோளாறுகள் போன்ற காரணங்களால் இந்த   பயணம் 7 முறை ஒத்தி வைக்கப்பட்டு நேற்று   வெற்றிகரமாக புறப்பட்டு சென்றது.
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா செல்லும் இந்த குழுவில்  அமெரிக்காவை சேர்ந்த  பெக்கி விட்சன்,  ஹங்கேரி நாட்டை சேர்ந்த திபோர் கபு,  போலந்தை சேர்ந்த  உஸ்னான்ஸ்கி ஆகியோரும்  இடம்  பெற்று இருக்கிறார்கள்.
இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இவர்கள் சென்ற விண்கலம்  தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது.  ஆக்சியம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்தின்  ‘பால்கன் 9’ என்ற  விண்கலத்தில் புறப்பட்டு சென்றனர்.
மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் இந்த   விண்கலம் விண்ணில் சீறி பாய்ந்தது.  இன்று மாலை  சரியாக  4.30 மணிக்கு  சர்வதேச  விண்வெளி நிலையத்தை  பால்கன் 9 சென்றடையும். அதாவது 28 மணி நேரத்தில்  இலக்கை அடையும்படி  பயணம் வெற்றிகரமாக நடந்து வருகிறது.
இந்த  பயணத்தில் இந்திய வீரர்,  சுக்லா விமானியாக செயல்படுகிறார். அவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சார்பில் செல்கிறார். திட்ட நிபுணர்களாக ஹங்கேரியின் திபோர் காப்பும், போலந்தின் உஸ்னான்ஸ்கியும் இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றனர்.
திட்டத்தின் கமாண்டராக  அமெரிக்காவின் பெக்கி விட்சன் செயல்படுகிறார்.  அவருக்கு இது ஐந்தாவது விண்வெளி பயணமாகும். அவர் இதற்கு முன்பு இரண்டு முறை சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று வந்துள்ளார்.
இந்த குழுவினர் சர்வதேச விண்வெளி மையத்தில்  14 நாட்கள் தங்கி இருந்து சுமார் 60 ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன்  சென்று   இருக்கிறார்கள்.
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா மட்டும்  7 ஆய்வுகளை மேற்கொள்கிறார். 
விண்வெளியில் நுண்ணீர்ப்பு தொடர்பாக இந்திய ஆய்வு நிறுவனங்கள் மேற்கொண்ட  சோதனைகளை சுக்லா விண்ணில் ஆய்வுக்குட்படுத்துவார். விண்ணில் இருந்த வண்ணம், இந்திய மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடம்  சுக்லா பேச திட்டமிட்டு உள்ளார்.

விண்வெளி வீரர்கள் 4 பேருடன், ஜாய் என்ற சிறிய அன்னப் பறவை பொம்மையும்  விண்வெளிக்கு  எடுத்து செல்லப்பட்டுள்ளது.  அத்துடன் வீரர்கள் தங்களது விருப்பமான உணவு வகைகளையும் கொண்டு சென்று இருக்கிறார்கள்.

புவி ஈர்ப்பு விசையை தாண்டி வெளியே செல்லும் போது  ஜாய்   பொம்மையை  பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

விண்வெளியில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உருவாக்கப்பட்டிருக்கும் இரண்டு புதிய மருந்துகளின் செயல்திறனை ஆராய்வது போன்ற முக்கிய ஆய்வுகளும்  இங்கு  மேற்கொள்ளப்படுகிறது.

விண்கலம் புறப்படும் முன், இந்திய வீரர் சுக்லா,  தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை ,  நான்  ஆய்வு கருவிகளை மட்டும் எடுத்து செல்லவில்லை.  140 கோடி இந்தியர்களின் நம்பிக்கைகளையும் எடுத்து செல்கிறேன்.  இந்த பயணம் வெற்றிபெற இந்தியர்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

 சுக்லா  இன்று மாலை  செல்ல இருக்கும், சர்வதேச விண்வெளி மையத்திற்கு இது வரை 270 விண்வெளி ஆய்வாளர்கள் சென்றுள்ளனர். ஆனால் ஒரு இந்தியர் கூட அங்கே செல்லவில்லை. அந்த குறையை இன்று மாலை நம்முடைய சுக்லா  தீா்த்து வைப்பார் என்பதில்  எந்த ஐயமும் இல்லை.

இந்த பயணம் மூலமாக இந்தியாவின் விண்வெளி ஆய்வு  புதிய மைல்கல்லை எட்டும் என்பது உறுதி.

 சுக்லா நேற்று விண்வெளிக்கு புறப்பட்டு சென்றதை  பார்த்த அவரது பூர்வீக கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு,  பிரதமர் மோடி ஆகியோரும்  சுக்லா உள்ளிட்ட பயண குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.  ஒட்டு மொத்த இந்தியாவும் அவர்களை  வாழ்த்துகிறது.

 விண்வெளி பயணத்தை தொடங்கிய  10 நிமிடத்தில், சுக்லா தனது பயணம் குறித்த தகவல்களை பகிர்ந்தார், அதில், ……..வணக்கம், என் அன்பான இந்திய மக்களே 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இந்தியா்  விண்வெளிக்கு செல்கிறார். என்ன …… அற்புதமான பயணம்.

என் தோளில் உள்ள மூவர்ணக்கொடியை பார்க்கும்போது,……. நான் தனி ஆள் இல்லை.  140 கோடி இந்தியர்களும் என்னோடு  இருக்கிறார்கள் என்று  சொல்கிறது’  என  தனது உள்ளத்தின் ஆழத்தில் இருந்து   இந்த  பதிவை வெளியிட்டு இருக்கிறார்.   ஆம் சுக்லாவின் மனது சொல்வது உண்மை தான்.  ஒட்டுமொத்த இந்தியாவும் அவருடன் இருக்கிறது.

இந்த குழுவினர் நடத்தும்  ஆய்வுகள் ஒவ்வொன்றும் மனித குலத்தின் மேன்மைக்கு பயன்பட நாம் வாழ்த்துவோம்.

error: Content is protected !!