உத்தரப் பிரதேச மாநிலம் ஆரையா மாவட்டத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவர், திடீரென தனது அறையிலிருந்து காணாமல் போனார். காலையில் அவரது அறைக்கதவைத் திறந்து பார்த்த பெற்றோருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கையில் அந்தப் பெண்ணுக்குப் பதிலாக ஐந்து அடி நீளமுள்ள பாம்பு சட்டை (பாம்பு தோல்), வளையல்கள் மற்றும் குங்குமம் ஆகியவை கிடந்தன.
இதைப் பார்த்த பெற்றோர் மற்றும் ஊர் மக்கள், அந்தப் பெண் ஒரு ‘நாகினி’யாக (பாம்புப் பெண்) மாறிவிட்டதாகவும், அவருக்கு அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகவும் நம்பி அச்சமடைந்தனர். இந்தத் தகவல் காட்டுத்தீயாகப் பரவியதால், கிராமமே பயத்தில் உறைந்தது. ஆனால், விசாரணையில் இறங்கிய போலீசார் பெண்ணின் செல்போனை ஆய்வு செய்தபோது உண்மை வெளிவந்தது.
அந்தப் பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரைக் காதலித்து வந்ததும், திருமணத்திற்குப் பயந்து அவருடன் தப்பியோடியதும் தெரியவந்தது. ஊர் மக்களைத் திசைதிருப்பவும், தன்னைத் தேடாமல் இருக்கவும் அவர் பாம்பு சட்டையைப் படுக்கையில் போட்டுவிட்டுச் சென்ற நாடகத்தைப் போலீசார் கண்டுபிடித்தனர். “இது அமானுஷ்யம் அல்ல, திட்டமிட்ட ஏமாற்று வேலை” என்று கூறியுள்ள போலீசார், தப்பியோடிய ஜோடியைத் தேடி வருகின்றனர்.

