விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் நடிகர் விஷால் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்று செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தைப்திருப்பித் தர உத்தரவிடக் கோரி விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க விஷால்க்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேமா ஶ்ரீனிவாசன், நடிகர் விஷால் தற்போது, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மகுடம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் அந்த படத்திற்காக பெறப்படும் தொகையை டெபாசிட் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, மனு குறித்து விஷால் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை நவம்பர் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.