நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சங்கரகுமார், விவசாயி. இவரது மகன் சபரி கண்ணன் (வயது 15). இவர், வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 4-ந் தேதி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர் சபரி கண்ணன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், ஆசிரியர்கள் அந்த மாணவரை கண்டித்ததுடன், மறுநாள் தந்தையை அழைத்து வரும்படி கூறினர்.
கடந்த 7-ந் தேதி வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்துவிட்டு சபரி கண்ணன் பள்ளிக்கு வந்தார். பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த சபரி கண்ணணை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் மீட்டு சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அந்த மாணவனை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து மீண்டும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவன் இறந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவரின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பு மாணவரின் உடல் வந்த வாகனத்துடன் நெல்லை- அம்பை சாலையில் மறியல் நடத்தினர். இந்த நிலையில் நேற்று இரவு மாணவன் படித்த பள்ளியில் புகுந்த சிலர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 பஸ்களை எரித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதுடன், பள்ளியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.