இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடக்கிறது.காவல்துறை இயக்குநர் அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்டு தீவுத்திடல் அருகே போர் நினைவுச் சின்னம் வரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறவுள்ளது.
இதற்காக மாலை 3 மணிக்கே அந்த இடத்தில் முன்னாள் ராணுவத்தினர் சீருடையுடன் அணிவகுத்து வந்தனர். மாணவர்கள், இளைஞர்கள் தேசிய கொடிகளுடன் குவிந்தனர். சரியாக 5 மணிக்கு பேரணி தொடங்க உள்ளது. பேரணி ஏற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
வெயில் தாக்கத்திற்காக பேரணி நடைபெறும் 200 இடங்களில் அரேபியன் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நடமாடும் கழிப்பறைகள் 1 இடத்திற்கு 5 இருக்கைகள் என மொத்தம் 10 இடங்களில் 50 இருக்கைகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 6 இடங்களில் She Toilet அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிடும் வகையில், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் 30 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
பேரணி நடைபெறும் 10 இடங்களில் மருத்துவக் குழுக்களுடன் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தேவையான குடிநீர் வசதிகள், உயிர்காக்கும் மருந்துகள், ஒரு முகாமுக்கு 3000 ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் என மொத்தம் 30,000 ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 15 ஆம்புலன்ஸ்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கால்நடை மருத்துவப் பிரிவின் மூலம், பேரணி நடைபெறும் இடங்களில் நாய்கள் மற்றும் மாடுகளின் இடையூறுகள் ஏற்படாத வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.