திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்கான வரிசையில் பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி உள்ளது. இதனால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பி சிலாதோரணம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்திற்கு சுமார் 18 மணி நேரம் ஆகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணதேஜா ஓய்வறை அருகே உள்ள சாமி தரிசனத்திற்கான வரிசையில் ஒருவர் பின்னால் ஒருவர் செல்லும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பக்தர் தான் அணிந்து வந்த பெல்ட்டை கழற்றி மற்றொரு பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதனை பார்த்த அங்கிருந்த ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர் தடுத்து நிறுத்த முயன்றும் பக்தர்கள் சண்டையிட்டு கொண்டனர். இது குறித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் அங்கு வந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் பக்தர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் பக்தர்கள் பொறுமையுடன் தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும். சாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் அனைவரும் பக்தி உணர்வுடன் இருக்க வேண்டுமே தவிர அராஜகத்தில் ஈடுபடக்கூடாது என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

