அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், இன்று குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்களை நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார். அதன்படி ஞானசேகரன் மீது கூறப்பட்ட 11 குற்றங்களிலும் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மொத்தமாக அவருக்கு 30 வருட சிறைத்தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அதாவது தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை என நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார்.
இந்த தண்டனை குறித்து அரசு வழக்கறிஞர், மேரி ஜெயந்தி கூறியதாவது:
பரோல், தண்டனை குறைப்பு எதையும் ஞானசேகரன் பெற முடியாது. தலைவர்கள் பிறந்தநாள், சுதந்திர திருநாள் என எந்த சிறப்பு காரணங்களையும் காட்டி ஞானசேகரன் வெளியே வரமுடியாது. அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்படும். ஞானசேகரன் 30 வருடமும் சிறை அனுபவித்து ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஞானசேகரனின் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூறும்போது, ஒவ்வொரு பிரிவிலும் அவருக்கு கூடுதல் தண்டனையே வழங்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து நாங்கள் அப்பீல் செய்வோம் என்றார்.